தேர்தல் ஆணையத்தின் அனைத்து கட்சி கூட்டம் ஓபிஎஸ், இபிஎஸ் அணி பங்கேற்க அனுமதி

சென்னை: தேர்தல் ஆணையத்தின் அனைத்து கட்சி கூட்டத் தில் ஓபிஎஸ், இபிஎஸ் அணி பங்கேற்க ஆணையம் அனுமதி அளித்துள்ளது. ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் பணிகள் குறித்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் மாநில அளவில் தலைமை தேர்தல் அதிகாரியும், மாவட்ட அளவில் மாவட்ட தேர்தல் அதிகாரியும் (கலெக்டர்கள்) ஆலோசனை நடத்த வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, நாளை (ஆகஸ்டு 1ம் தேதி) காலை 11.30 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடத்தப்படுகிறது.

சென்னை, தலைமை செயலகத்தில் நாளை நடைபெறும் கூட்டத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட தமிழக அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 9 கட்சிகளுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதிமுக சார்பில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.தற்போது, அதிமுக தலைமை அலுவலகம் எடப்பாடி பழனிசாமி அணியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி, எங்கள் அணியினரும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதை, மாநில தலைமை தேர்தல் அதிகாரியும் ஏற்றுக்கொண்டு, நாளை நடக்கும் கூட்டத்தில் ஓபிஎஸ் அணியினர் பங்கேற்க கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. இதை ஏற்று ஓபிஎஸ் தரப்பில் தற்போதைய எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

Related Stories: