சென்னை: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சீசன் நிறைவு பெற்றது. இதனால் இப்பகுதி பறவைகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அமைந்துள்ளது, புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். இந்த சரணாலயத்தில் ஒவ்வொரு ஆண்டின் இறுதியில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் சீசன் துவங்கும். அப்போது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ரஷ்யா, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 30,000க்கும் மேற்பட்ட பறவைகள் வருவது வழக்கம். குறிப்பாக வர்ணனாரை, சென்னாரை, பூநாரை, கூழைக்கடா, மிளிர்அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், நீர்காகம் உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் இந்த வேடந்தாங்கல் சரணாலயத்தில் உள்ள கடம்ப மரங்களில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்யும்.