சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு; முதல் கட்டமாக 500 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்.! மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பை தொடர்ந்து முதல் கட்டமாக 500 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பருவமழைக்கு முன்பாக மழைநீர் வடிகால்வாய் பணிகளை முடிக்கப்படும் என்று மேயர் பிரியா அறிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியின் மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் இன்று காலை நடந்தது. கூட்டத்திற்கு மேயர் பிரியா தலைமை தாங்கினார். துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது வாய்ப்பு அளிக்கப்பட்ட கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் நிலவும் குறைகளை தெரிவித்து, அதை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க ேவண்டும் என்று பேசினர்.

பல கவுன்சிலர்கள் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை பருவமழை தொடங்குவதற்கு முன்பு முடித்து தர வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர். இவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து மேயர் பிரியா பேசியதாவது: சென்னையில் மழை காலத்தில் தண்ணீர் தேங்குவதை தடுப்பதற்காக மழைநீர் வடிகால்வாய் பணிகள் பல கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விரைவாக முடிப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியை பார்வையாளராக நியமித்துள்ளார். இந்த அதிகாரிகள் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மழைநீர் வடிகால்வாய் பணிகளை ஆய்வு செய்து, தங்களது மண்டலங்களில் எந்த அளவுக்கு பணிகள் முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை அறிக்கையாக தெரிவித்து வருகின்றனர்.

பருவமழை தொடங்குவதற்கு முன்பாக மேலும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழைநீர் தேங்க கூடிய பகுதிகளுக்கு முழு முன்னுரிமை கொடுத்து அந்த பணிகளை வேகமாக முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.மாநகராட்சி நிலை குழு தலைவர் க.தனசேகரன் பேசுகையில், “சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் எம்பி, எம்எல்ஏக்கள் பார்வையாளராக வரலாம். அவர்கள் மன்ற கூட்டத்தில் பேசுவதற்கு அனுமதி உள்ளதா? சட்ட விதி என்ன சொல்கிறது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்” என்றார். இதற்கு அளித்து மேயர் பிரியா பேசுகையில், “எம்பி, எம்எல்ஏக்களும் மக்கள் பிரதிநிதிகள் தான். மன்ற கூட்டத்திலும் அவர்கள் பேச அனுமதி உள்ளது. அவர்களும் மக்கள் பிரச்னைகளை மன்ற கூட்டத்தில் தெரிவிப்பதற்கு சட்ட விதி உள்ளது” என்றார்.

அதைத் தொடர்ந்து பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக சென்னை மாநகராட்சியில் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் மாணவர் சேர்க்கை அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே, மாணவர்களின் நலனுக்காக கற்றல், கற்பித்தல் சிறந்த முறையில் நடைபெறும் வகையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். எனவே, பற்றாக்குறையை போக்கும் வகையில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 500 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த ஆசிரியர்களுக்கான சம்பளத்தை நிர்ணம் செய்வது பற்றி கல்வி நிலைக்குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் கூடி முடிவு எடுக்கும்

* தி.நகர் பகுதிகளில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளுக்கு முக்கிய காரணிகளாக இருப்பது மாம்பலம் கால்வாய் தான். ஏற்கனவே, இந்த கால்வாயை பிரமாண்டமாக சீர்ப்படுத்தி அதன் கரை ஓரங்களில் நடைபாதைகள், பூங்காக்களை அமைத்து அழகுப்படுத்தும் திட்டம் மாநகராட்சி உருவாக்கி இருந்தது. இப்போது இந்த திட்டமே மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது உள்பட 97 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் ஜெயராமன் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில், “சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க கூடாது. அது முறைக்கேட்டிற்கு வழிவகுக்கும். முறைப்படி ஆசிரியர்களை தேர்வு செய்து நிரந்தர ஊதியத்தில் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதற்கு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பதில் அளிக்கையில், “தற்போதைய சூழ்நிலையில் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை எதிர்பாராத அளவுக்கு உயர்ந்துள்ளது. அந்த மாணவர்களுக்கு தரமான கல்வி கற்று கொடுப்பதற்கு தேவையான அளவுக்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அதனால், தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கான சம்பளம் விரைவில் நிர்ணயிக்கப்படும்” என்றார். முன்னதாக ேகள்வி நேரம் தொடங்குவதற்கு முன்பாக அதிமுக கவுன்சிலர்கள், மின் கட்டணம் உயர்வை கண்டித்தும், சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வெளிநடப்பு செய்தனர்.

Related Stories: