சென்னை: பண மோசடி தொடர்பாக ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன இயக்குனர்கள் 14 பேர் மீதும், ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட 5 நிறுவனங்கள் மீதும் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி நிர்வாக இயக்குனர் ராஜசேகர், ஜெய்கமல், ஜெயக்கொடி, நவீன், மாலதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் மனுதாரர்கள் அனைவரும் இணைந்து 50 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நிறுவன இயக்குனர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை பணத்தையும் டெபாசிட் செய்யவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர்களின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.