சென்னை: சாலை பாதுகாப்புக்கு அறிவியல் ரீதியான அணுகுமுறையை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழக அரசு, சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து சில முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சாலை பாதுகாப்பு சிறப்பு பணிக்குழுவும் சென்னை ஐ.ஐ.டி.யின் சாலை பாதுகாப்பு திறன்மிகு மையமும் இணைந்து கையெழுத்திட்டுள்ளது. விபத்து நடக்கும் இடங்களில் தடயவியல் விபத்து தணிக்கைகளை நடத்துவது, மனித, வாகனம் மற்றும் சாலைகளின் சூழலை கருத்தில்கொண்டு விரிவான, விஞ்ஞான ரீதியான விபத்து விசாரணையை உருவாக்குவது, ஆபத்தான இடங்களில் விபத்துகளை தவிர்ப்பதற்கான பரிந்துரைகளை புகைப்படங்களுடன் சமர்ப்பிப்பது, போக்குவரத்தை திறம்பட அமல்படுத்துவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை முழுமையாக உருவாக்குவது என இதற்கு இலக்குகளை நிர்ணயித்துள்ளனர்.