பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்யும் திட்டம் உள்ளதா?..ஒன்றிய, தமிழக அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்யும் திட்டம் உள்ளதா அல்லது உற்பத்தியை அனுமதித்து, புழக்கத்தில் விட்டபிறகு மேலாண்மை செய்வதற்கு மட்டும் திட்டம் உள்ளதா என்று ஒன்றிய, மாநில அரசுகள் இரண்டு வாரங்களில் பதிலளிக்குமாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நெகிழி உற்பத்தியாளர்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், டாஸ்மாக் பாட்டில்களை திரும்ப பெறுவது போல பிளாஸ்டிக் பாட்டில்களையும் திரும்ப பெறலாம் என்றும், அதன்மூலம் மீண்டும் பயன்பாட்டிற்கு வராமல் தடுக்க முடியும். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது போன்ற ஆலோசனைகளை வழங்கலாம். பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்தும் வகையில், மாற்று பொருட்களை பயன்படுத்தும்படி ஆலோசனைகளை வழங்கலாம் என்று ஒன்றிய மற்றும் மாநில அரசு தரப்பு வழக்கறிஞர்களிடம் தெரிவித்தனர்.

மேலும், தமிழகத்தில் மஞ்சப்பை திட்டம் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாற்று பொருட்கள் குறித்தும் ஆலோசிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அரசுக்கு அறிவுறுத்தினர். அதற்கு தமிழக அரசு மற்றும் ஒன்றிய தரப்பு வழக்கறிஞர்கள் பதில் அளித்தனர். இதைக்கேட்ட நீதிபதிகள்,  பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை விதிகள் மட்டும் தான் அமலில் உள்ளதே தவிர, பிளாஸ்டிக் கழிவுகளை அழிப்பதற்கான விதிகள் ஏதும் இல்லை. நீலகிரியில்பிளாஸ்டிக் பாட்டில்கள் பெரும்பாலும் ஒழிக்கப்பட்டுவிட்டது.

பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி செய்யப்படுவதை யார் உறுதி செய்வார்கள். யார் பொறுப்பான அதிகாரி என்று ஒன்றிய மாநில அரசுகள் பதில் தரவேண்டும்.பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்யும் திட்டம் உள்ளதா அல்லது உற்பத்தியை அனுமதித்து விட்டு அதை புழக்கத்தில் விட்டபிறகு மேலாண்மை செய்வதற்கு மட்டும் திட்டம் உள்ளதா என்று ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் 2 வாரங்களில் பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: