செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 7 மாநில முதல்வர்கள் வாழ்த்து

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 7 மாநில முதல்வர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் 44வது சர்வதேச சதுரங்கப் போட்டி தொடக்க விழா நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பிக்குமாறு பல்வேறு மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கினர். கேரள முதல்வர் பினராயி விஜயன், அருணாச்சலபிரதேச முதல்வர் பெமா காண்டு, சிக்கிம் மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் ஆகியோர் சர்வதேச சதுரங்க போட்டி சிறப்பாக நடைபெற வாழ்த்துகளை தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மேலும், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு சர்வதேச சதுரங்க போட்டி சிறப்பாக நடைபெற வாழ்த்து தெரிவித்தார். மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், அரியானா முதல்வர் மனோகர் லால் ஆகியோரும் சமூக வலைத்தளங்கள் மூலம் சர்வதேச சதுரங்க போட்டி சிறப்பாக நடைபெற வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: