சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் கழுதைப்புலி வயது முதிர்வு மற்றும் உடல் உறுப்பு செயலிழப்பின் காரணமாக உயிரிழந்தது. இதுகுறித்து, வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 19 வயதான ‘வெங்கட்’ என்ற ஆண் வரி கழுதைப்புலி கடந்த இரண்டு மாத காலமாக பல்வேறு உடல்நல கோளாறுகளால் சிகிச்சை பெற்று வந்தது. பூங்கா கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் வயது முதிர்வு மற்றும் உடல் உறுப்பு செயலிழப்பின் காரணமாக நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து உயிரிழந்த வரி கழுதைப்புலியை பூங்கா மருத்துவமனையில் வைத்து டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர், அதன் வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.