சென்னை நேரு விளையாட்டு அரங்கம் வரையிலான செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் தொடங்கியது

சென்னை: சென்னை வந்துள்ள செஸ் ஒலிம்பியாட் ஜோதியை மாநிலக் கல்லூரி கிரிக்கெட் மைதானத்திலிருந்து நேரு உள்விளையாட்டு அரங்கம் வரை பேரணியாக எடுத்துச் செல்லும் நிகழ்வு தொடங்கியது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. மேலும், செஸ் ஒலிம்பியாட் தொடரை முன்னிட்டு முதல் முறையாக ஒலிம்பியாட் ஜோதி அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த மாதம் ஜூன் 19ம் தேதி, சென்னையில் பிரதமர் நரேந்திர மோடியால் ஒலிம்பியாட் ஜோதி தொடங்கி வைக்கப்பட்டு, பின் இந்தியாவின் 75 நகரங்களுக்கு சென்று, இன்று சென்னை வந்துள்ளது.

பிரதமர் மோடியால் தொடங்கிவைக்கப்பட்ட ஜோதியானது, அன்றே கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாத் ஆனந்திடம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாநிலக் கல்லூரி விளையாட்டு மைதானத்திற்கு வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதியை, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், விஸ்வநாதன் ஆனந்திடம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து ஜோதி தொடர் ஓட்டத்தை அமைச்சர்கள் மெய்யநாதான், சேகர்பாபு, மதிவேந்தன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கிவைத்தனர். மாநிலக் கல்லூரி மைதானத்திலிருந்துத் துவங்கி காமராஜர் சாலை, ராஜாஜி சாலை கொடிமரச் சாலை, அண்ணா சாலை, பல்லவன் சாலை, சென்ட்ரல் சதுக்கம், ஈவெரா சாலை, ராஜா முத்தையா சாலை வழியாக நேரு உள் விளையாட்டரங்கம் வரை ஜோதி ஓட்டம் நடைபெற்றது.   

Related Stories: