தூத்துக்குடி: ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழாய்வில் சில வாரங்களுக்கு முன்பு தங்கத்தினால் ஆன காதணி கிடைத்த நிலையில், தற்போது ஈட்டி மற்றும் இடுக்கி போன்ற ஆயுதங்களும், அவற்றின் மீது நெல் படிமங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப்பணிகள் கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 8 மாத காலமாக நடந்து வரும் இந்த அகழாய்வில் 70க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்கத்தால் செய்யப்பட்ட காதணி சில வாரங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இது சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்தை சேர்ந்தது என்றும், 20 கேரட் தங்கத்தால் செய்யப்பட்டது என்பதும் தெரிய வந்தது.