தாம்பரம் மாநகராட்சியில் குறைந்த உறுப்பினர்கள் பங்கேற்றதால் மண்டல குழு கூட்டம் ஒத்திவைப்பு

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில், மண்டல குழு கூட்டத்தில் குறைவான உறுப்பினர்கள் பங்கேற்றதால், கூட்டம்  ஒத்தி வைக்கப்பட்டது. தாம்பரம் மாநகராட்சியில், 3வது மண்டல குழு தலைவராக ஜெயபிரதீப் சந்திரன் உள்ளார். இந்நிலையில், நேற்று தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 3வது மண்டல குழுவின் 2வது கூட்டம் நடைபெற இருந்தது. இந்த மண்டல குழுவில், திமுக, காங்கிரஸ், அதிமுக மற்றும் சுயேச்சை கட்சியை சேர்ந்த 14 மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், நேற்று நடைபெற இருந்த இக்கூட்டத்திற்கு மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப் சந்திரன், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர் கிரிஜா சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, அதிமுகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர் சுபாஷினி ஆகியோர் மட்டுமே வந்து இருந்தனர். மண்டல குழு தலைவருடன் சேர்த்து நான்கு பேர் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொண்டதால், கூட்டம் நடத்த முடியாமல் போனது. இதனைத்தொடர்ந்து, மறுதேதி குறிப்பிடாமல் கூட்டத்தை மண்டல குழு தலைவர் ஒத்தி வைத்தார். மண்டல குழு கூட்டத்துக்கு, தலைவர் உட்பட 4 பேர் மட்டுமே வந்த சம்பவம் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: