சென்னை விமான நிலையத்தில் 2 புதிய நவீன மின்தூக்கிகள்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்நாடு, சர்வதேச விமான பயணிகள், மற்றும் மெட்ரோ ரயில் பயணிகள் ஆகியோருக்கு பயன்படும் விதத்தில் கண்ணாடிகளாலான 2 புதிய நவீன மின் தூக்கிகள் (லிப்ட்கள்) நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

சென்னை, விமான நிலையத்தில்  உள்நாட்டு விமான முனையம் 1, மற்றும் சர்வதேச பயணியர் முனையம் 4 ஆகியவற்றை இணைக்கும் வகையில், கண்ணாடியால் வடிவமைக்கப்பட்ட புதிய இரண்டு மின்துாக்கிகள் (லிப்ட்கள்) அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின்துாக்கிகள் தரைத்தளம், வாக்கலேட்டர் தளமான முதல்தளம், மற்றும் புறப்பாடு பகுதியான இரண்டாம் தளம் ஆகியவற்றை இணைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்தூக்கிகள் தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளங்களில் நின்று செல்லும்.

இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையம் மற்றும் சர்வதேச விமான நிலையம் இடையே வாக்கலேட்டர்களில் செல்லும் பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதுமட்டுமின்றி விமான நிலையத்திலிருந்து மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வாக்கலேட்டரில் செல்லும் பயணிகளுக்கும் மிகவும் வசதியாக இருக்கும்.  இந்த மின்தூக்கிகள் இரண்டும் 360 டிகிரியில் பாா்வையிடும் வகையில் முழுவதும் கண்ணாடிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் மின்தூக்கிகளில் விளக்குகள் இல்லாமலேயே ஒளி கிடைக்கும் விதத்தில் உள்ளது.

அதோடு இந்த மின் தூக்கிகள் திறந்தவெளியில் கண்ணாடி கூண்டுகளில் இயக்குவதால், பயணிகள் அச்சமின்றி பயணிக்கலாம். இதனால் பயணிகளிடையே பெரும் வரவேற்பை இந்த மின்தூக்கிகள்பெறும். இதேபோல கண்ணாடியால் வடிவமைக்கப்பட்ட மின்தூக்கிகள், புதிதாக கட்டப்பட்டு வரும் நவீன விமான நிலைய முனையத்திலும் நிறுவப்பட உள்ளன. இந்த புதிய 2  மின்தூக்கிகளை, சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார் தொடங்கிவைத்தார்.

Related Stories: