மக்கள் குறைதீர் நாள் கூட்டம்; 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,66,666 மதிப்பில் மானிய தொகைக்கான காசோலைகள்: மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினர்.  இதில் நிலம் சம்பந்தமாக 61 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 40 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 26 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 45 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 51 மனுக்களும்; என மொத்தம் 223 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்.

நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.பிறகு சிறு மற்றும் குறுந்தொழில் சுயவேலைவாய்ப்பு வங்கி கடன் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து ₹6 லட்சத்து 20 ஆயிரம் கடன் பெற்ற 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ₹1 லட்சத்து 66 ஆயிரத்து 666 மதிப்பீட்டில் மானியத் தொகைக்கான காசோலைகளையும், மேலும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு சட்ட புத்தகம் வாங்க மற்றும் பதிவு செய்ய நிதி உதவி தொகையாக ₹50 ஆயிரத்திற்கான காசோலையினையும் வழங்கினார்.

இம்மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்  பி.ப.மதுசூதணன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர்  மு.கலைச்செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: