நெல்லையில் ஒரு அதிகாரிக்கு 39 ஆர்டர்லிகள் உள்ளதாக நீதிபதி தகவல்; போலீஸ் உயரதிகாரிகள் ஆர்டர்லி வைத்துள்ளதாக தகவல் வந்தால் நடவடிக்கை: உள்துறை முதன்மை செயலாளருக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை: ஆர்டர்லி வைத்திருப்பதாக தகவலோ, புகாரோ வந்தால் நன்னடத்தை விதிகளின் கீழ் சம்பந்தப்பட்ட காவல்துறை உயரதிகாரி மீது உள்துறை முதன்மை செயலாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 காவல் துறையில் தற்போது பணியாற்றும் அதிகாரிகளும், ஓய்வுபெற்ற அதிகாரிகளும் ஆர்டர்லிகளை பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது, தனிப்பட்ட வாகனங்களில் காவல்துறை ஸ்டிக்கர்கள், கறுப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டுவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உத்தரவிடப்பட்ட வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.குமரேசன், தமிழகத்தில் காவல் துறையில் ஆர்டர்லி முறையை ஒழிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உள்துறை செயலாளர் உயரதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை, போலீஸ் ஸ்டிக்கர் தொடர்பான சுற்றறிக்கைகளை தாக்கல் செய்தார்.

அப்போது நீதிபதி,  கடந்த 1979ம் ஆண்டில் அனைத்து மாநில முதல்வர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 1979 செப்டம்பர் 5ம் ேததி ஆர்டர்லி முறை ரத்து செய்யப்பட்டது. ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த இந்த ஆர்டர்லி முறை இன்னும் தொடர்கிறது. அதை  உடனடியாக ஒழிக்க வேண்டும். ஆர்டர்லி முறையால் ஒட்டுமொத்த சீருடை பணியாளர்கள் வாரியத்துக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.  திருநெல்வேலியில் உள்ள காவல்துறை உயரதிகாரி ஒருவருக்கு 39 ஆர்டர்லிகள் உள்ளதாக  நீதிமன்றத்துக்கு கடிதம் வந்துள்ளது. அதிகாரிகள் வீட்டில் வளர்க்கும் நாயை பராமரிக்க பயிற்சி பெற்ற காவலர் வேண்டுமா. நாயை நீங்கள் பராமரிக்க வேண்டியது தானே. முக்கிய பணி இருக்கும்போது தேவைப்பட்டால் கூடுதல் பணியாளர்களை உரிய அனுமதி பெற்று தற்காலிகமாக பயன்படுத்திக்கொள்ளலாம். காவல் துறை அரசின் முழு கட்டுப்பாட்டில் தான் இயங்க வேண்டும். இல்லாவிட்டால் அது பேராபத்தாகி விடும் என்று எச்சரித்தார்.

 

இதைத்தொடர்ந்து கூடுதல் அட்வகேட் ஜெனரல், தனிப்பட்ட வாகனங்களில் காவல்துறையினர், காவல்துறை என்றோ அதற்கான சின்னத்தையோ ஒட்டக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.  உயரதிகாரிகள் விதி முறைகளை கடைபிடிப்பதை அரசு கண்காணித்து வருகிறது என்றார்.

இதைக்கேட்ட நீதிபதி, உயர் நீதிமன்ற பணியாளர் தனது வாகனத்தில் உயர் நீதிமன்றம் என்று ஸ்டிக்கர் ஒட்டியுள்ளதாக போலீஸ்காரர் ஒருவர் எனக்கு கடிதம் எழுதினார். அதை தலைமை நீதிபதி கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன். முதலில் நம்மை திருத்தியாக வேண்டும்.

 பணியில் இருக்கும் காவல்துறை உயரதிகாரிகளை விட ஓய்வு பெற்றவர்கள் அதிக சலுகைகளை வைத்துக் கொண்டிருப்பது ஆபத்தானது. பல மாநிலங்களில் ஆர்டர்லி முறை ஒழிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் ஆர்டர்லி முறை இன்னும் தொடர்கிறது. இது உயரதிகாரிகளின் ஆங்கிலேயே காலனிய மனநிலையை காட்டுகிறது.

 

காவல்துறை உயரதிகாரிகள் ஆர்டர்லி முறையை இன்னும் பின்பற்றினால் அது அரசு உத்தரவை மதிக்காதது போன்றதாகும். 1979ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு காகிதத்தில் மட்டுமே இருப்பதை ஏற்க முடியாது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த இரு வார கால அவகாசம் வழங்கப்படுகிறது. ஒரே உத்தரவில் இதை அரசால் அமல்படுத்த முடியும்.  உயரதிகாரிகள் தங்களது ஆர்டர்லிகளை தாமாக முன்வந்து விட்டுகொடுக்க வேண்டும். உயரதிகாரிகள் ஆர்டர்லி வைத்திருப்பதாக புகார் அல்லது தகவல் வந்தால் அவர்கள் மீது நன்னடத்தை விதியின் கீழ் தமிழக உள்துறை முதன்மை செயலாளர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை ஆகஸ்ட் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: