சாவுக்கு மாமியார் காரணம்’ என ஆடியோ பதிவிட்டு 4 மாத கர்ப்பிணி தற்கொலை: வேளச்சேரியில் சோகம்

வேளச்சேரி: எனது சாவுக்கு மாமியார்தான் காரணம் என ஆடியோ பதிவிட்டு கர்ப்பிணி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேளச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் இந்துமதி (25).  இவருக்கும்   தி.நகரை சேர்ந்த குமரன் (37) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணம் ஆனது முதலே இந்துமதியை அவரது மாமியார் சாந்தி, ‘‘ராசியில்லாதவள், நீ அதிகம் படிக்கவில்லை, குறைவாக சாப்பிடு’’ என மட்டம் தட்டி பேசி   சித்ரவதை செய்து வந்துள்ளார்.

 இந்நிலையில், இந்துமதி    தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். ஆனாலும்  மாமியாரின், தொடர் துன்புறுத்தல் காரணமாக ஒன்றரை மாதத்திற்கு முன்பு வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள தனது தாய் வீட்டிற்கு  சென்றார். ஆனால் இந்துமதியை சமாதானம் செய்து அழைத்துச் செல்ல   கணவரும் வரவில்லை. இதனால், கணவரும் கண்டுகொள்ளவில்லையே என்ற விரக்தியில்  தாய் வீட்டிலேயே இருந்துள்ளார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனது அக்காவின் செல்போனுக்கு ‘‘எனது சாவுக்கு மாமியார்தான் காரணம். நானும் பாப்பாவும் செல்கிறோம்’’ என வாட்ஸ்அப்பில் ஆடியோவாக பதிவு செய்து அனுப்பி வைத்து விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வாட்ஸ்அப் ஆடியோவை பார்த்து, உறவினர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது இந்துமதி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வேளச்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி   பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்துமதிக்கு திருமணம் ஆகி 5 மாதமே ஆவதால் கோட்டாட்சியர் விசாரணைக்கும்  பரிந்துரைக்கப்பட்டுள்ளது.   4 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேளச்சேரி பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: