சேலம்: தமிழகத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று சேலத்தில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்ட அரசு துறை அலுவலர்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நகர்ப்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார். அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், காந்தி மற்றும் அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சணாமூர்த்தி, நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் பொன்னையா, மாவட்ட கலெக்டர்கள் சேலம் கார்மேகம், நாமக்கல் ஸ்ரேயாசிங், தர்மபுரி சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.