சென்னை: அதிமுக பொதுக்குழு அன்று நடந்த கலவரம் தொடர்பாக 3 மாவட்ட செயலாளர்கள் முன்ஜாமீன் கோரிய வழக்கில், காவல்துறை பதிலளிக்கும் வரை கைது செய்யக்கூடாது என்று சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 11ம் தேதி இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே நடந்த கலவரம் தொடர்பாக உதவி ஆய்வாளர் காசுப்பாண்டி அளித்த புகாரின்பேரில் ராயப்பேட்டை போலீசார் இபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும் கலவரத்தை தூண்டுதல், சட்டவிரோதமாக தடுத்தல், பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தை ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.