சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் அதிகாரி ஐ.ஜி.பொன் மாணிக்கவேலுக்கு எதிரான குற்றசாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதி மன்றம் தனி காவல்துறை குழுவை அமைத்தது. அதன் தலைவராக ஐ.ஜி.பொன் மாணிக்கவேலை நியமித்தது. அவர் தலைமையில் ஒரு குழு சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை கண்டுபிடித்து குற்றவாளிகளை கைது செய்தது. சிலை கடத்தல் தொடர்பாக கடந்த 2017ம் ஆண்டு டி.எஸ்.பி.காதர் பாட்சாவை, பொன் மாணிக்கவேல் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். கடந்த 2008ம் ஆண்டு விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட சில ஐம்பொன் சிலைகள் காணாமல் போன விவகாரத்தில் 9 ஆண்டுகளுக்கு பிறகு காதர் பாட்சா மீது குற்றச்சாட்டப்பட்டது.