கொரோனாவில் இருந்து மீண்ட ஓ.பன்னீர்செல்வம் ‘டிஸ்சார்ஜ்’: ஒரு வாரம் ஓய்வு எடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தல்

சென்னை: கொரோனா பாதித்து தனியார் மருத்துவமனையில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார். அவரை ஒரு வாரம் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடந்த 15ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையொட்டி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இதில் அவரது உடல்நிலை தேறி வந்தது. இந்த நிலையில் கடந்த 18ம் தேதி ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தலைமை செயலகத்துக்கு கவச உடையுடன் சென்றிருந்தார்.

அங்கு வாக்களித்து விட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ வல்லுனர்கள் அடங்கிய குழுவினர் அவரது உடல்நிலையை கண்காணித்து வந்தனர். நேற்று முன்தினம் அவருக்கு மீண்டும் கொரோனா டெஸ்ட் எடுத்து பார்க்கப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா இல்லை என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து நேற்று ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார். அடையார் வீட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றுள்ளார். அவர் ஒருவாரம் வீட்டில் தங்கி ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் வலியுறுத்துள்ளனர். அதனால் ஓ.பன்னீர்செல்வம் எந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல், ஒரு வாரம் ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ளார்.

Related Stories: