குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு-சிவகங்கை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை

இளையான்குடி : குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மிளகாய் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம்  இளையான்குடி வட்டாரத்தில் ஆண்டு தோறும் 4 ஆயிரம் ஹெக்டேரிலும், ராமநாதபுரம் மாவட்டத்தில்  ஆர்.எஸ்.மங்கலம், முதுகுளத்தூர், பரமக்குடி, சாயல்குடி ஆகிய வட்டாரத்தில் சுமார் 15 ஆயிரம் ஹெக்டேரிலும், ராம்நாடு முண்டு எனப்படும் குண்டு மிளகாய் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. செப்டம்பர் முதல் மார்ச் வரை மிளகாய் சாகுபடியில்  சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு  லட்சம் விவசாயிகள் ஆண்டுதோறும் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் பிற மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா மகாராஷ்டிரா,  குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கும் அதிகளவில் செல்கிறது. மேலும் தூத்துக்குடி,சென்னை கடல் வழியாகவும், திருச்சி, கோவை, சென்னை ஆகிய வான் வழியாகவும், கத்தார், ஓமன், துபாய்,  சவுதி அரேபியா ஆகிய அரபு நாடுகளுக்கும், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, ஆகிய கிழக்காசியா நாடுகளுக்கும் இந்த குன்டு மிளகாய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சம்பா மிளகாய் எனப்படும் குச்சி மிளகாயை விட இந்த குண்டு மிளகாய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்துக்கள் உள்ளன.  குண்டு மிளகாய் பொடி உணவு பயன்பாட்டுக்கும், மிளகாய் எண்ணெய் தயாரித்து மருத்துவ பயன்பாட்டுக்கும் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த குன்டு மிளகாய்கு புவிசார் குறியீடு வழங்க, தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என,  இளையான்குடி வட்டார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆர்.எஸ்.மங்கலம் விவசாயி ராஜகோபால் கூறியதாவது, தமிழகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் விளையும் குண்டு மிளகாய்க்கு தனி மவுசு. சமையலுக்கு மட்டுமின்றி மருத்துவத்திற்கும் அதிகளவில்  பயன்படுகிறது. இந்த பகுதி மண்ணுக்கு உரித்தான குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சாலைக்கிராமம் வில்லியம் கூறியதாவது, இந்த பகுதி விவசாயிகளிடம் கொள்முதல் செய்து அரபு நாடுகள், ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டு தோறும் கோடி கணக்கில்  வர்த்தகம் நடைபெறும் குண்டு மிளகாய்கு புவிசார் குறியீடு வழங்க இந்த பகுதி அமைச்சர், எம்எல்ஏ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: