பட்டியலின மக்கள் குறித்து விமர்சனம் நடிகை மீரா மிதுன் வழக்கில் சாட்சிகளுக்கு சம்மன்: செஷன்ஸ் கோர்ட் உத்தரவு

சென்னை: பட்டியலினத்தவர்கள் குறித்து, சமூக வலைதளத்தில் அவதூறாகப் பேசிய வழக்கில், நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக்கிற்கு எதிரான சாட்சிகளுக்கு ‘சம்மன்’ அனுப்ப சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டுள்ளது. பட்டியலின சமூகத்தினர் குறித்து அவதூறாகப் பேசி சமூக வலைத்தளத்தில் நடிகை மீரா மிதுன் வீடியோ வெளியிட்டார். இதுதொடர்பாக பல்வேறு அமைப்புகள் அவர் மீது போலீசில் புகார் அளித்தன. இதையடுத்து, வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் இருவரையும் கைது செய்தனர்.

பின்னர் இருவரும் ஜாமீனில் வெளி யே வந்தனர். அவர்கள் மீதான வழக்கு, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன் விசாரணையில் உள்ளது. வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு அரசு வழக்கறிஞர் எம்.சுதாகர் ஆஜரானார். வழக்கின் சாட்சி விசாரணைக்காக மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகிய இருவரும் ஆஜராகினர். இதையடுத்து இந்த வழக்கில் மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு எதிரான சாட்சி விசாரணைக்காக சாட்சிகளுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டு. ஆகஸ்ட் 6க்கு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.

Related Stories: