ஆடி முதல்நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் களைகட்டிய காசிமேடு மீன் விற்பனை கூடம்: ஏராளமானோர் மீன் வாங்க ஆர்வமுடன் வந்தனர்

சென்னை: சென்னை காசிமேடு மீன் விற்பனை கூடத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமானோர் மீன்களை வாங்க வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று மீன் வாங்க சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து அசைவ பிரியர்கள் மீன்களை வாங்க காசிமேடு வந்தனர். காசிமேடு கடற்கரையிலிருந்து கடலுக்கு விசைப்படகுகள் மூலமாக பிடித்து வரும் மீன்கள் நேரடியாக காசிமேடு மீன் விற்பனை கூடத்தில் விற்பனை செய்யப்படுவதால் சென்னையில் உள்ள பல மொத்த வியாபாரிகளும் அசைவ பிரியர்கள் ஏராளமானோர் மீன்களை வாங்குவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாரியம்மன் கோயில்களில் ஆடி திருவிழா நடைபெறும். வீடுகளிலும் கூழ் வார்த்தல் நடைபெறுவதால் அசைவ பிரியர்கள் மீன் வாங்க காசிமேட்டிற்கு வருவார்கள்.

 நேற்று காசிமேட்டில் விற்பனை செய்யப்படும் மீன்களின் விலை விவரம்: வஞ்சிரம் கிலோ 1200 முதல்1500 வரை, கொடுவா கிலோ 800, பர்லா கிலோ 350, பாறை கிலோ 250, சங்கரா 400 முதல் 600 வரை, கடம்மா கிலோ 400 முதல் 600 வரை, நெத்திலி கிலோ 300 முதல் 450 வரை. இறால் நண்டு போன்றவை 350 முதல் 600வரையும் விற்பனை செய்யப்பட்டது.

மீன்களின் விலை அதிகமாக இருந்தபோதும் மக்கள் ஆர்வமுடன் மீன்களை வாங்கி சென்றனர். தற்போது ஆடி மாதம் தொடங்கி உள்ளதால் 10 வாரத்திற்கு மீன் வாங்க காசிமேட்டிற்கு ஏராளமான மக்கள் வருவார்கள். இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகம் காணப்படும். அதிகளவு மீன் வரத்து இருந்தால் மீன்விலை குறைய கூடும் .இல்லை என்றால் எப்போது போல மீன் விலை சற்று உயர்வாகவே காணப்படும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: