சென்னை: தமிழக அரசின் சார்பில் ‘தமிழ்நாடு நாள் விழா’ நாளை சென்னையில் நடக்கிறது. விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை கலைவாணர் அரங்கத்தில், தமிழ்நாடு நாள் விழா 18ம் தேதி (நாளை) காலை 11.30 மணியளவில் நடைபெற உள்ளது. விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விழா பேருரையாற்றுகிறார். இதில் கருத்தரங்கம், செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக குறும்படம் திரையிடல் மற்றும் விழா சிறப்பு மலர் வெளியிடப்படுகிறது. முன்னதாக, காலை 9 மணியளவில் மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் தலைமையில் கருத்தரங்கம் நடக்கிறது. சமூக நீதி கண்காணிப்பு (ம) பாதுகாப்பு குழு தலைவர் சுப.வீரபாண்டியன் ‘தமிழ்நாடு உருவான வரலாறு’, ஆழி செந்தில்நாதன் ‘‘மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடந்த போராட்டமும்”, வாலாசா வல்லவன் ‘தமிழகத்துக்காக உயிர் கொடுத்த தியாகிகள்’, ம.ராசேந்திரன் ‘தாய்நாட்டுக்கு பெயர் சூட்டிய தனயன்’ எம்எல்ஏ நா.எழிலன் ‘முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு’ ஆகிய தலைப்புகளில் கருத்துரையாற்றுகிறார்கள்.