தாம்பரம்: மேற்கு தாம்பரம், புலிகொரடு பகுதியில் அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற வேண்டும், என பொதுமக்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத்திடம் புகார் அளித்தனர். இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி புலிகொரடு பகுதியில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில், 11 ஆயிரம் சதுர அடி கொண்ட அரசு புறம்போக்கு நிலம் 13 குடும்பங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. கடந்த மாதம் அதேபகுதியை ஒட்டியுள்ள ரூ.12.50 கோடி மதிப்பிலான 50 சென்ட் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றபட்ட நிலையில், மீதமிருந்த நிலங்களை மீட்கும் பணிகள் நடைபெற்றது.
எனவே, தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர். அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து முறையாக நோட்டீஸ் வழங்கவில்லை எனக்கூறி ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து வருவாய்த் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, ஆக்கிரமிப்பு வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர். இதன்மூலம் ரூ.5 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டதாக, வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.