மரபுகளை கடைப்பிடிக்காத ஆளுநரை கண்டித்து காமராஜர் பல்கலை பட்டமளிப்பு விழா புறக்கணிப்பு; அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை: மரபு முறைகளை பின்பற்றாத ஆளுநரை கண்டிக்கும் வகையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் நடத்த உள்ள  பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி  தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி:மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54வது பட்டமளிப்பு விழா நாளை (இன்று) நடைபெற்ற உள்ளது. ஆனால் இது குறித்து இணை வேந்தரான தன்னிடமும், உயர்கல்வித்துறை செயலாளரிடமோ எவ்வித ஆலோசனையும் நடத்தவில்லை.

பட்டமளிப்பு விழாவுக்கு வேந்தர், இணைவேந்தர், இதன் பின்பு ஒரு சிறப்பு விருந்தினர் அழைக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த மரபு முறைகளை எதுவும் கடைபிடிக்காமல் கவுரவ விருந்தினராக ஒன்றிய இணை அமைச்சர் முருகன் அழைக்கப்படுவது எவ்வாறு ஏற்புடையது. துணைவேந்தரை கேட்டால் தனக்கு ஒன்றும் தெரியாது, ஆளுனர் கூறியதை தான் நான் செய்கிறேன் என்று கூறுகிறார். ஆளுநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்கும்போது, அப்படி தான் செய்வோம் என்று கூறுகிறார்கள். இவற்றை பார்க்கும்போது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் அரசியலை புகுத்துகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆளுநராக செயல்படாமல் பாஜவிற்கு பிரசாரம் செய்பவர்களில் ஒருவராக ஆளுநர் இருக்கிறார்.பட்டமளிப்பு விழாவில் கடைபிடிக்கப்படும் மரபு முறைகள் முறையாக எதையும் கடைபிடிக்காத காரணத்தினால் ஆளுநரை கண்டிக்கும் வகையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறேன்.

இது போன்ற பிரச்னைகள் எழக் கூடாது என்று தான் ஆளுநர் வேந்தராக இருப்பதை நீக்கி, மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட முதலமைச்சர் வேந்தராக இருப்பதற்கான சட்டமுன்வடிவு பேரவையில் தாக்கல் செய்து ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், அதில் ஆளுநர் இன்னும் கையொப்பம் இடவில்லை. ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்ற தீர்மானம் கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். ஆளுநர் திராவிடம் குறித்து பேசும்போது வரலாற்றை தெரிந்த பின்பு பேசவேண்டும். இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.

Related Stories: