எழும்பூர் காவல் அருங்காட்சியகத்தில் ஆடியோ, வீடியோ காட்சி அரங்கம்: டிஜிபி தொடங்கி வைத்தார்

சென்னை: எழும்பூரிலுள்ள காவல் அருங்காட்சியகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆடியோ, வீடியோ காட்சி அரங்கத்தை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு நேற்று துவக்கி வைத்து பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

சென்னை எழும்பூரில் உள்ள மாநில காவல் அருங்காட்சியகத்தில் புதிதாக குளிர்சாதன வசதியுடன் ஆடியோ, வீடியோ காட்சி அரங்கு நவீன முறையில்  அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறை சுமார் 1230 சதுர அடி பரப்பில் சுமார் 50 பேர் அமரும் வகையில் திரையரங்கு நாற்காலிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. எல்இடி டிவி, ஒலி சுவர் பேனல்கள் மற்றும் DOLBY Atomos ஒலி பெருக்கி கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளது.

பாரம்பரியமிக்க கலாச்சாரத்துடன் கூடிய வகையில் வண்ணங்கள் பூசப்பட்டு, அலங்கார விளக்குகள் மற்றும் சுற்றுப்புற விளக்குகள் பொருத்தப்பட்டு பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தில் சி.சி.டி.வி கேமரா மற்றும் தீ பாதுகாப்பு சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளது. இதை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் இதில் கலந்துகொண்ட புனித அந்தோணியார் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர்களிடம் தமிழக காவல் துறையின் பெருமைகளை விளக்கி அவர்களுடன் கலந்துரையாடினார்.  நிகழ்ச்சியில், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர், காவல் துறை இயக்குனர் ஏ.கே.விசுவநாதன், தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர் லோகநாதன் மற்றும் அதிகாரிகள்  கலந்து கொண்டனர்.

Related Stories: