அதிமுக பொதுக்குழுவில் வரவு- செலவு கணக்கை தாக்கல் செய்தார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

சென்னை: அதிமுக பொதுக்குழுவில் வரவு- செலவு கணக்கை அமைப்புச் செயலாளரான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார். அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், செயற்குழு ஒப்புதல் அளித்த 16 தீர்மானங்களும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது. மேலும், இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், எடப்பாடி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வரவு- செலவு கணக்கை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார்.

வழக்கமாக பொருளாளர் மட்டுமே வரவு செலவு கணக்கை தாக்கல் செய்வார். ஆனால், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவுக்கு வராத நிலையில் அமைப்புச் செயலாளரான விஜயபாஸ்கர் அதனை தாக்கல் செய்தார். வரவு- செலவு கணக்கை தாக்கல் செய்த பின் பேசிய விஜயபாஸ்கர், இன்றைய இடைக்கால பொதுச்செயலாளர் நாளைய நிரந்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று கூறினார். மேலும், அதிமுக கணக்கில் நிலை வைப்புத் தொகையாக ரூ.244.80 கோடியும், நடப்பு கணக்கில் ரூ.2.77 கோடியும் உள்ளது எனக் கூறினார். 9.01.2021 முதல் 22.06.2022 வரை வரப்பெற்றுள்ள மொத்த வரவு ரூ.53.4 கோடி எனவும், மொத்த செலவு ரூ.62 கோடி எனவும் தெரிவித்தார்.

Related Stories: