சென்னை: கலை பண்பாட்டுத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும், தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக 5 முதல் 16 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு ஓவிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து, கலை பண்பாட்டுத்துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் உலக ஓவிய தினத்தை சிறப்பாகக் கொண்டாடும் விதமாகவும், படைப்பாற்றல் திறனை மேம்படுத்திடும் நோக்கத்திலும், ஓவியப்பயிற்சி முகாம்கள், ஓவிய கலைக்காட்சிகளை நடத்த அரசாணை வெளியிடப்பட்டதை தொடர்ந்து, முதற்கட்டமாக மண்டல அளவில் 5 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியருக்கு மண்டல கலை பண்பாட்டு மையங்கள் மூலம் ஜவகர் சிறுவர் மன்றங்களில் ஓவியப்பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. அரசு கவின் கலைக்கல்லூரி, சென்னை - 03 வளாகத்தில் வரும் 16ம் தேதி நடைபெறும் ஓவியப்பயிற்சி முகாமில் பென்சில் ஓவியம், வாட்டர் கலர் பெயின்டிங், ஆயில் கலர் பெயின்டிங் மற்றும் அக்ரலிக் பெயின்டிங், பேப்ரிக் பெயின்டிங் மற்றும் கண்ணாடி ஓவியம் ஆகிய 5 ஓவிய கலைப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும்.