இருதரப்பு மீனவர்கள் மோதலில் நாகூர் துறைமுகத்தில் பைபர் படகுக்கு தீ வைப்பு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வதில் கீழபட்டினச்சேரி, மேலபட்டினச்சேரி கிராம மீனவர்களுக்கு இடையே மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த 5ம்தேதி நள்ளிரவு இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து நாகூர் போலீசார் இருதரப்பை சேர்ந்த 25 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர். இந்நிலையில் நாகூர் துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருந்த கீழபட்டினசேரியை சேர்ந்த விஜி என்பவரது பைபர் படகுக்கு நேற்றுமுன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள் தீ வைத்து விட்டு தப்பினர். இதில் படகு மற்றும் படகில் இருந்த வலைகள், ஐஸ்பெட்டி உள்ளிட்ட தளவாட பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமானது. நேற்று காலை இதை பார்த்து மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து சக மீனவர்கள் மற்றும் மீனவ பெண்கள் அங்கு குவிந்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படகுக்கு தீ வைத்த நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: