மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமனம் இளையராஜா, பி.டி.உஷாவுக்கு தலைவர்கள் வாழ்த்து

சென்னை: மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இளையராஜா மற்றும் பி.டி.உஷாவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வைகோ (மதிமுக, பொது செயலாளர்): இசை துறையில் சாதனை சரிதம் படைத்து வரும் நம் இளையராஜா, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளது நம் தமிழகத்திற்கு கிடைத்துள்ள பெரும் சிறப்பாகும். விளையாட்டு வீராங்கனை பி.டி.உஷாவும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்க இருக்கும் இசைஞானி இளையராஜாவுக்கு திருவையாறு தியாகராஜர் ஆராதனை மஹோத்வ சபாவின் தலைவர் என்ற முறையிலும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

டிடிவி.தினகரன் (அமமுக, பொது செயலாளர்): தமிழ் சமூகத்தின் போற்றத்தக்க ஆளுமைகளில் ஒருவரான இளையராஜாவின் நாடாளுமன்ற பணி அனைவரும் பெருமை கொள்ளத்தக்க வகையில் அமையட்டும்.

கமல்ஹாசன் (மக்கள் நீதி மையம், தலைவர்): இளையராஜாவின் கலைச் சாதனைக்காகக் கவுரவிக்கவேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம்.

எர்ணாவூர் நாராயணன் (சமத்துவ மக்கள் கழக தலைவர்): இசையமைப்பாளர் இளையராஜா ராஜ்ய சபா எம்.பி.,யாக நியமனம் செய்ததற்கு வாழ்த்துகள். மணி அரசன் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories: