முதல்வர் மு.க.ஸ்டாலின்; நாளை திருவண்ணாமலை பயணம்

சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 2 நாட்கள் பயணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை செல்கிறார். சென்னையில் இருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை வரும் முதல்வருக்கு, மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூரில் நாளை காலை 10 மணிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து, 11 மணியளவில் கீழ்பென்னாத்தூர் அடுத்த ஆராஞ்சி கிராமத்தில் இல்லம் தேடி கல்வித்திட்ட அரசு நிகழ்ச்சியில் முதல்வர் கலந்துகொள்கிறார்.

பின்னர், திருவண்ணாமலை வரும் அவருக்கு வழிநெடுகிலும் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 6 மணியளவில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சிவாச்சாரியார்களுக்கு புத்தாடைகள் வழங்குகிறார். பின்னர் திருவண்ணாமலை-வேலூர் சாலையில் உள்ள கலைஞரின் வெண்கல திருவுருவ சிலை மற்றும் பிரம்மாண்டமான அண்ணா நுழைவு வாயில் ஆகியவற்றை திறந்து வைக்கிறார்.

6.30 மணிக்கு அண்ணா நுழைவு வாயில் அருகே திறந்தவெளி திடலில் நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று முதல்வர் பேசுகிறார். நாளை மறுநாள் காலை 9.30 மணியளவில் அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை திறந்து வைக்கிறார். 10 மணியளவில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்குகிறார். முதல்வரின் வருகையை முன்னிட்டு, திருவண்ணாமலை நகரமே விழா கோலமாக காட்சியளிக்கிறது.

Related Stories: