ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கபடி போட்டியை ஒட்டி ஒரே சமுதாயத்தை சேர்ந்த இருவேறு கிராமத்தினர் மோதி கொண்டதால் பதற்றம் நிலவுகிறது. இது தொடர்பாக 400 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். முதுகுளத்தூர் அருகே உள்ள விளங்குத்தூரில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற கபடி போட்டியில் கீழக்கன்னிசேரி அணி தோல்வியடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த கீழக்கன்னிசேரி கிராமத்தினருக்கும், விளங்குத்தூரை சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அருகில் உள்ள கிராமத்தினர் இருதரப்பையும் சமரசம் செய்து வைத்துள்ளனர். இதனிடையே பேருந்தில் என்ற விளங்குத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்களை மறித்த கீழக்கன்னிசேரி கிராமத்தினர், தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விளங்குத்தூரை சேர்ந்தவர்கள் வயல்வெளிக்கு சென்ற எதிர்தரப்பினரை கம்பு, ஆயுதங்களுடன் தாக்க முயன்றதால் பதற்றம் உருவானது. தகவல் அறிந்த முதுகுளத்தூர் போலீசார், நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று பேச்சுநடத்தி, இருதரப்பினரையும் அமைதிபடுத்தினர். பின்னர் மோதல் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மோதல் தொடர்பாக 400 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.