மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் அம்மா உணவகம் அமைக்க கோரிய வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 25 கிலோ மீட்டர் இடைவெளியிலும் அம்மா உணவகங்கள் அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 50 கிலோ மீட்டர் இடைவெளியில் உணவகங்கள் அமைந்துள்ளன. அவற்றில் தரமற்ற உணவுகள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

எனவே, பயணிகளுக்கும், லாரி, டெம்போ போன்ற சரக்கு வாகன டிரைவர்கள், ஊழியர்களுக்கும் குறைந்த விலையில் உணவு வழங்கும் வகையில் ஒவ்வொரு 25 கிலோ மீட்டர் தூரத்தில் அம்மா உணவகங்கள் அமைக்க உத்தரவிட வேண்டும். சுகாதாரமான உணவை குறைந்த விலைக்கு வழங்க ஏதுவாக அம்மா உணவகங்களை அமைக்கக்கோரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அரசுக்கு அனுப்பிய மனுவை பரிசீலிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையாக ஆய்வு செய்யாமல், பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் மட்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

Related Stories: