தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பஞ்சு, நூல் விலை உயர்வை ஒன்றியஅரசு திரும்ப பெற வேண்டும்: தேமுதிக தீர்மானம்

சென்னை: தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பஞ்சு, நூல் விலை உயர்வை ஒன்றிய அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தியுள்ளது. தேமுதிக உட்கட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமை தாங்கினார். கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், தேர்தல் பணி குழு உறுப்பினர்கள், சார்பு அணி செயலாளர்கள், துணை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தவறான செய்திகள் வெளியிடுவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திரவுபதி முர்மு வெற்றி பெற தேமுதிக சார்பில் முழு ஆதரவு தெரிவிப்பது, தமிழகத்தில் தேமுதிக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் உட்கட்சி தேர்தலை உடனடியாக நடத்த தேர்தல் பொறுப்பாளர்கள் சிறப்பான முறையில் உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும். பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். அதை நம்பி வாழ்கின்ற தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, மாநில அரசு ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: