நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கான கட்டணம் ரத்து: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

நாமக்கல்: நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கான கட்டணம் ரத்து  செய்யப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி நேற்று (03.07.2022) நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில், அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில்களில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தாவது, திருக்கோயில் மற்றும் திருக்கோயிலை சுற்றி உள்ள சுற்றுப் பிரகாரத்தை ஆய்வு செய்தோம். பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 20 ரூபாய் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

2009 ஆம் ஆண்டு இத்திருக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. தற்போது திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு திருக்குடமுழுக்கு விரைவில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படும். திருப்பணிகள் தொடங்குவது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து  அலுவலர்களுடன் ஆலோசிக்கப்பட்டது. அருகில் உள்ள அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயிலில் ஆய்வு செய்தோம். இத்திருக்கோயிலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.  சிதிலமடைந்த பழைய தல விருட்சக மரத்தின் பாகங்கள் கண்ணாடி பேழைக்குள் வைத்து பக்தர்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும். இந்நிகழ்வில் ஈரோடு இணை ஆணையர் திரு. பரஞ்சோதி, துணை ஆணையர் திரு. ரமேஷ், திருக்கோயில் உதவி ஆணையர் திரு.இளையராஜா, திருக்கோயில் அலுவலர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Related Stories: