திருவள்ளூர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் தூய்மை பணிகள் குறித்து விழிப்புணர்வு; மாணவிகள் உறுதிமொழி ஏற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் என் குப்பை என் பொறுப்பு என்ற அடிப்படையில் தீவிர தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு நகர மன்ற தலைவர் பா.உதயமலர் பாண்டியன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை செல்வி, நகராட்சி சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

இந்த முகாமில் நகராட்சி ஆணையர் வி.ராஜலட்சுமி மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவியர்களிடம் தூய்மைக்கான உறுதி மொழியையும் எடுத்துக் கொண்டனர். அதாவது என் நகரம் என் பெருமை. என் நகரத்தை தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்திருப்பது எனது கடமை. பொது இடங்களில் குப்பையை கொட்டாமல் இருப்பதே நகரத் தூய்மைக்கான முதற்காரணம் என்பதை நான் நம்புகிறேன்.

நான் பொது இடங்களில் குப்பையை கொட்டமாட்டேன். பிறரையும் குப்பை கொட்ட அனுமதிக்க மாட்டேன்.  குப்பையை வீட்டிலேயே பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைப்பேன் என ஆணையர் வி.ராஜலட்சுமி உறுதி மொழி வாசிக்க அதனை பொது மக்களும் திரும்ப சொல்லி உறுதியேற்றனர். இந்த விழிப்புணர்வு முகாமில் தூய்மை இந்தியா திட்டத்தின் மேற்பார்வையாளர் ரவி, களப்பணியாளர் கண்ணன், சுகாதார ஆய்வாளர் சுதர்சன், மேற்பார்வையாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: