சென்னை: கொளத்தூர் செந்தில் நகரில் இருசக்கர வாகனங்களில் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு கடந்த 2020 பிப்ரவரி 22ம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, 2 இருசக்கர வாகனங்களில் வந்த 3 பேரை மடக்கி, சோதனை செய்ததில் அவர்களிடம் இரண்டரை கிலோ கஞ்சா மற்றும் 20 கிராம் மெத்தா பெட்டமின், 250 எல்.எச்.டி. போதை மாத்திரைகள், 50 மெதிலின் டைஆக்சி மெத்தா பெட்டமின் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் போதைப்பொருட்களை வைத்திருந்த கொளத்தூரை சேர்ந்த வசந்தகுமார் (23), நிஷாந்த் ராயன் (22), பாலச்சந்தர் (23) ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.