காரைக்குடி அருகே தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.10 கோடி கண்மாய் நிலம் மீட்பு: முதல்வர் தனிப்பிரிவு புகார் மீது அதிரடி நடவடிக்கை

காரைக்குடி:முதல்வர் தனிப்பிரிவில் அளித்த புகாரின் அடிப்படையில், காரைக்குடி அருகே ரூ.10 கோடி மதிப்புள்ள கண்மாய் நிலம் மீட்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனைக்கு எதிரே 49.8 எக்டேர் கண்மாய் உள்ளது. இதில் 10 ஏக்கர் நிலத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனிநபர்கள் ஆக்கிரமித்து வேலி அமைத்தனர். இதுகுறித்து அதிமுக ஆட்சியில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, முதல்வர் தனிப்பிரிவுக்கு தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என புகார் அனுப்பினார். இதனை தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் ஜிபிஎஸ் கருவி மூலம் அளந்து ஆக்கிரமிப்பு பகுதிகளை கண்டறிந்தனர். நேற்று வட்டாட்சியர் மாணிக்கவசாகம் தலைமையில் மண்டல துணை வட்டாட்சியர் யுவராஜா, தலைமை நில அளவர் பிச்சுமணி, சார் ஆய்வாளர் ராஜசேகர், வருவாய் ஆய்வாளர் மெகர்அலி, கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார், மாணிக்கம் ஆகியோர் ஆக்கிரமிப்பை அகற்றினர்.

வட்டாட்சியர் மாணிக்கவாசகம் கூறுகையில், ‘‘கலெக்டர் மதுசூதன்ரெட்டி, கோட்டாட்சியர் பிரபாகரன் ஆகியோர் அறிவுரைப்படி அரசு நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு வருகிறது. இந்நிலத்தை பொறுத்தவரை கண்மாய் புறம்போக்கு என பதிவான நிலையில் தனிநபர்கள் சிலர் வேலி அமைத்து 10 ஏக்கரை ஆக்கிரமித்துள்ளனர். இதன் சந்தை மதிப்பு ரூ.10 கோடிக்கு மேல் இருக்கும். முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய புகாரின் அடிப்படையில் இந்நிலத்தை தற்போது மீட்டுள்ளோம்’’ என்றார்.

Related Stories: