மருத்துவ உபகரணங்கள் விற்பனையாளரை அரிவாளால் வெட்டி ரூ.20 லட்சம் பறிப்பு; சென்னை அண்ணா சாலையில் நள்ளிரவு பரபரப்பு

சென்னை: சென்னை அண்ணா சாலையில் மருத்துவ உபகரணங்கள் விற்பனையாளரை அரிவாளால் வெட்டி ரூ.20 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, கண்ணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சிவபாலன் (27). பி.டெக் மற்றும் பயோடெக் பட்டதாரியான இவர், சேப்பாக்கம் கலைவாணர் அரங்கம் எதிரே உள்ள லாட்ஜில் தங்கி, சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபல மருத்துவ உபகரணங்கள் விற்பனை கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார்.

இவர், நேற்று முன்தினம் இரவு ராயப்பேட்டை பி.எம் தெருவில் உள்ள நண்பர் வினோத்தை பார்க்க ரூ.20 லட்சத்துடன் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அண்ணாசாலை எஸ்.பி.ஐ.வங்கி அருகே சென்றபோது, 3 பைக்குகளில் வந்த 6 பேர், இவரை வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு, அவர் வைத்திருந்த ரூ.20.22 லட்சத்தை பறித்து சென்றுள்ளனர். இதையடுத்து, ரத்த காயங்களுடன் சிவபாலன் அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று, 6 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

மேலும், சிவபாலனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சிவபாலனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், தான் தனியாக மருத்துவ உபகரணங்கள் விற்பனை கடை தொடங்க முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்ததாகவும், இதற்காக சொந்த ஊருக்கு சென்று தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ரூ.20 லட்சம் வாங்கி வந்தபோது மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதாகவும் கூறினார்.

ஆனால், மருத்துவ உபகரணங்கள் விற்பனை கடை அமைக்க குறைந்தது ரூ.1 கோடிக்கு மேல் செலவாகும் என்பதால் சிவபாலன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, சிவபாலனிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் பணம் குறித்தும், அதற்கான கணக்குகள் குறித்து போலீசார் சிவபாலனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: