பல்லாவரம்: திரிசூலம், சிவசக்தி நகரில் அறநிலையத் துறைக்கு சொந்தமான 80.73 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கடைகளை அகற்றி, இடத்தை மீட்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்தன் பாரதிதாசன் தலைமையில் 150க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று வீடுகளுக்கு சீல் வைக்க வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, 2 பெண்கள் உள்பட 4 பேர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். மேலும், அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ், அங்குள்ள செல்போன் டவரில் ஏறி கீழே குதித்து விடுவதாக தற்கொலை மிரட்டல் விடுத்தார். அவரை போலீசார் சமாதானப்படுத்தி கீழே இறக்கினர். இதைத்தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் 3 கடைகள், 12க்கும் மேற்பட்ட வீடுகளை அறநிலையத்துறை ஊழியர்கள் பூட்டி சீல் வைத்தனர்.