×

ஆரோக்கியம் சார்ந்த அழகே நல்லது (கருமைநிறம் போக்க )

தளும்புபோன்ற தோற்றமுடைய கருமை நிறம் எதனால் வருகிறது. மறைவுப் பகுதிகளில் இருக்கும் இந்த கருமை நிறங்களை எப்படி நீக்குவது? விளக்குகிறார் அழகுக்கலை நிபுணர் ஹேமலதா. தோல் ஆரோக்கியமாக இருந்தாலே தோற்றத்தில் பளபளப்பும் கூடும். சரும ஆரோக்கியத்திற்கு ஒவ்வாத சிறிய செயலும் தோலில் பெரிய பாதிப்புகளை உண்டுபண்ணலாம். சரும ஆரோக்கியம் என்பது அகத்தோற்றம் மட்டுமல்ல.

உடலின் மறைவான பகுதிகளான பின் கழுத்து, அக்குள்(under arm), தொடை இடுக்கு, மார்பகத்தின் கீழ்ப் பகுதிகளையும் சேர்த்தே. பெரும்பாலும் உடலின் மறைவான பகுதிகளே கருமை நிறத் தாக்குதலுக்கு இலக்காகும். கருமைநிறம் தோன்றும் உடலின் மறைவான இடங்களை நாம் கொள்வதில்லை. நமது வீடுகளில் சாதாரணமாக கிடைக்கும் உணவுப் பொருட்கள், மற்றும் மூலிகைகளைக் கொண்டு சரிசெய்யும் வழிமுறைகளைக் காணலாம்.

கருமைநிறம் தோன்றக் காரணங்கள்

* கோடை காலத்தில் அதிகமாகவே வியர்க்கும். அப்போது, வேர்வை சுரப்பிகளின் நீர், உடலின் இடுக்குப் பகுதிகளில் தங்கி, அந்த இடம் கருமை நிறத்திற்கு மாறிவிடுகிறது.

* சிலருக்கு உடல் எப்போதும் ஈரப்பதத்துடன் சொதசொதவென்ற நிலையிலேயே இருக்கும். அவர்களின் உள்ளங்கைகளைத் தொட்டால் கூட ஈரமாகவே இருக்கும். இவர்களின் சருமம் கருமை நிறத்தால் அதிக பாதிப்புக்குள்ளாகும். இவர்களது பின் கழுத்தும் கருமை நிறத்தில் தளும்பேறி இருக்கும்.

* குண்டாக இருப்பவர்களின் சருமத்தையும் கருமை நிறம் பாதிக்கும். காரணம், இவர்களின் உடல் பருமனால், சதை ஒன்றோடொன்று ஒட்டி காற்று நுழைய இடமின்றி, அந்த இடங்கள் கருமை நிறத்திற்கு மாறத் தொடங்கும்.

* சிலருக்கு கை, கால் முட்டிப் பகுதி கருப்பாகி அந்த இடத்தில் தோல் தடிமனாய் சொரசொரப்பாய் இருக்கும்.  முட்டிப் பகுதிகளைத் தரையில் ஊன்றி பயன்படுத்துதல், முட்டி போட்டு நிற்பது. முழங்கைகளை தரையில் வைத்து அழுத்துதல் போன்ற செயல்களால், அந்த இடத்தில் உள்ள தோல்களின் செல்கள் இறந்து, சருமம் கருமை நிறத்திற்கு மாறும்.

* கனமான ஆபரணங்களின் அழுத்தத்தில், கழுத்தில் உள்ள தோலின் செல்கள் இறந்து கருமைநிறம் தோன்றுகிறது.

* உடலுக்குத் தேவையான இருப்புச் சத்துக் குறைபாடு காரணமாகவும் கருமைநிறம்தோன்றும்.

* கருமைநிறத்தைக் கண்டுகொள்ளாமல் அப்படியே விடுவதாலும், சருமத்தில் தளும்பு போன்ற கருமை நிரந்தரமாகத் தங்கிவிடும்.

தவிர்க்கும் வழிமுறைகள்…

* நமது உயரத்திற்கு ஏற்ற சரியான உடல் எடையினை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

* வெயிலின் தாக்கத்தால் நீர்ச்சத்து குறையும்போது தண்ணீர் அதிகம் குடித்தல் வேண்டும். இதில் ரத்த ஓட்டம் சீரடையத் துவங்கி, குறிப்பிட்ட இடத்தில் தங்கிய தோலின் இறந்த செல்கள் நகரத் துவங்கும்.

* ஜீன்ஸ்,லெக்கின்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளை கோடை காலத்தில் அணிவதைத் தவிர்த்து தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். சரும ஆரோக்கியத்திற்கு காட்டன் உடைகளே மிகவும் நல்லது. அதேபோல் உள்ளாடைகளை இறுக்கமாக அணிவதையும் தவிர்க்க வேண்டும். இரவில் தூங்கச் செல்லும் முன்பு, தளர்வான ஆடைகளைப் பயன்படுத்துதலே சிறந்தது.

கருமைநிறத்தைப் போக்க..

ஆலுவேரா ஜெல் ஆலுவேரா எனப்படும் கற்றாழை சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கருமை நிறத்தை சரி செய்யும் வல்லமை ஆலுவேராவிற்கு இயற்கையாகவே உள்ளது. இது நம் சருமத்திற்குத் தேவையான எண்ணெய்த் தன்மை மற்றும் ஈரத்தன்மையுடன் கூடிய மாய்ச்சரைசராகவும் செயல்படுகிறது.

பயன்படுத்தும் முறை

ஆலுவேராவை செடியில் இருந்து எடுத்து தோல் நீக்கி, உள்ளிருக்கும் கொலகொலப்பான ஜெல்லினை நன்றாகத் தண்ணீரில் சுத்தம் செய்து, பிறகு மிக்ஸியில் நன்றாக அடித்துப் பேஸ்டாக்கிக் கொள்ள வேண்டும். குளிர்ச்சியான உடல்வாகைக் கொண்டவர்கள் குறைவான அளவும், சூடான தேகம் உடையவர்கள் அதிகமாகவும் எடுத்து உடல் முழுவதும் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து குளித்தால் கருமை நிறம் கொஞ்சம் கொஞ்சமாக சருமத்தில் நீங்க ஆரம்பிக்கும்.

எலுமிச்சை மற்றும் வெள்ளரி

எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் மற்றும் விட்டமின் சி உள்ளது. இது வெண்மைத் தன்மை (bleaching agent) அதிகமாக இருப்பதோடு, செல்களைத் தூண்டி புதிய செல்களை உருவாக்கும் சிறப்பும் எலுமிச்சைக்கு உண்டு.  வெள்ளரி சருமத்திற்கு குளிர்ச்சித் தன்மையினைத் தரவல்லது. நம் சருமத்தை ஒரே
தன்மைக்கு மாற்றும் இயல்பு கொண்டது.

எலுமிச்சையினை சின்னச்சின்னதாக வட்ட வடிவத்தில் வெட்டி கருமை நிறம் உள்ள இடத்தில் தேய்த்து 5 நிமிடத்திற்குப் பின் வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். குளியல் சோப்பினை தவிர்க்க வேண்டும். எலுமிச்சையுடன் தயிர் அல்லது வெள்ளரி சேர்க்கலாம். வறண்ட சருமம் உடையவர்கள், இரண்டு துளி தேங்காய் எண்ணெய் சேர்க்கலாம்.

பாதாம்

பாதாமில் சருமத்தின் கருமை நிறத்தை நீக்கும் விட்டமின் இ, எ மற்றும் பேட்டி ஆசிட் நிறைந்துள்ளது. இதனை பாதாமாகவோ அல்லது எண்ணெய்
வடிவிலோ பயன்படுத்தலாம். இரவில் ஐந்து அல்லது ஆறு பாதாமை எடுத்து தண்ணீரில் ஊறவைத்து காலையில் அதை பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கருமை நிறத்தின் மேல் தடவ உடல் குளிர்ச்சி அடையும். பத்து நிமிடம் கழித்து சுத்தம் செய்தல் வேண்டும். மேற்குறிப்பிட்ட வழிமுறைகளில் ஒன்றை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் செய்துவர, தோலின் கருமை நிறம் மறைய வாய்ப்புண்டு.

அடுத்த வாரம்…

கண்களுக்கு கீழே வரும் கருவளையம் எதனால்?

(ஒப்பனைகள் தொடரும்…)

Tags :
× RELATED சோதனைகளும் சாதனைக்கே!