மன்னார்குடியில் மழைநீர் தேங்கிய குழிக்குள் விழுந்த பசு மாடு இரவு முழுவதும் தவிப்பு: தீயணைப்புவீரர்கள் மீட்டனர்

மன்னார்குடி: மன்னார்குடியில் 12 அடி குழியில் விழுந்த பசுமாடு ஒன்று வெளியில் வரமுடியாமல் இரவு முழுவதும் தவித்தது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரைமணிநேரம் வரை போராடி பசுமாட்டை பாதுகாப்பாக மீட்டனர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மூன்றாம்தெரு மற்றும் இரண்டாம் தெரு இடையே பயன்படுத்த படாத நாராசுரம் சந்து உள்ளது. இந்த சந்தில் சுமார் 12 அடி ஆழமுள்ள குழி உள்ளது. அண்மையில் பெய்த மழைகாரணமாக அக்குழியில் பாதியளவு மழை நீர் தேங்கி உள்ளது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அந்த சந்து வழியாக வந்த பசு மாடு ஒன்று நிலை தடுமாறி குழிக்குள் விழுந்து விட்டது.

ஆழம் அதிகமாக இருந்ததால் வெளியே வர முடியாமல் இரவு முழுவதும் மாடு கத்திகொண்டே இருந்தது. மாட்டின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் வசித்து வரும் டாக்டர் செங்குட்டுவன் என்பவரது மனைவி மணிமேகலை என்பவர் மன்னார்குடி தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார்.அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த நிலைய அலுவலர் பாலசுப்ரமணியன், சிறப்பு நிலைய அலுவலர் சம்பத்குமார், நிலைய அலுவலர் (போக்குவரத்து) கேசவன் ஆகிய தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணிநேரம் போராடி குழிக்குள் விழுந்த பசு மாட்டை பாதுகாப்பாக மீட்டனர்.

Related Stories: