ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ரிசல்ட் வெளியீடு: தமிழகத்தில் 610 பேர் தேர்ச்சி பெற்று சாதனை; மெயின் தேர்வு செப்.16ல் தொடக்கம்

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 610 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மெயின் தேர்வு வரும் செப்டம்பர் 16ம் தேதி தொடங்கும் என்று யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 வகையான பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான(2022ம் ஆண்டு) சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 1011 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 2ம் தேதி அறிவித்தது. தொடர்ந்து பிப் 22ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.

இத்தேர்வுக்கு இந்தியா முழுவதும் இருந்து 11 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். இதில் சுமார் 5.5 லட்சம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த 5ம் தேதி நடந்தது. முதல்நிலை தேர்வு இந்தியா முழுவதும் 77 நகரங்களில் நடந்தது. தமிழகத்தில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வை எழுதினர். இந்த நிலையில் முதல் நிலை தேர்வுக்கான ரிசல்ட்டை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணைய தளமான www.upsc.gov.in, www.upsconline.nic.inல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சங்கர் ஐ.ஏ.எஸ்.அகடாமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது: சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலை தேர்வில் இந்தியா முழுவதும் 13090 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 610 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். எங்கள் அகாடமியில் சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம், டெல்லியில் பயின்ற 927 பேர் மாணவர்கள் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் எங்கள் அகாடமியில் படித்த 360 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு அடுத்தக்கட்டமாக மெயின் தேர்வு செப்டம்பர் 16ம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 5 நாட்கள் இந்த தேர்வு நடைபெறும்.

மெயின் தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பணி வரும் வாரங்களில் தொடங்கும் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை மெயின் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும். மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தக்கட்டமாக நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். வழக்கமாக ரிசல்ட் வெளியிட ஒரு மாதத்திற்கு மேல் ஆகும். ஆனால் தேர்வு நடைபெற்ற 15 நாட்களில் சிவில் சர்வீஸ்  முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: