தமிழகத்தில் ஒலிம்பியாட் செஸ் போட்டி நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது: இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா பேட்டி

காஞ்சிபுரம்: உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய சென்னையை சேர்ந்த 16 வயது செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, செஸ் உலகில் பிரமாண்ட சாதனை படைத்துள்ளார். இந்த நிலையில் மாமல்லபுரத்தில் 44வது ஒலிம்பியாட் செஸ் போட்டி  வரும் ஜூலை 28ல் துவங்கி ஆகஸ்ட்  வரை நடக்கிறது. இதில் 187 நாடுகளை சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட  செஸ் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 8வது தேசிய யோகா தின நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்தியாவின் இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா காஞ்சிபுரம் வந்தார். நிகழ்ச்சிக்கு பின் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு சாமி தரிசனம் மேற்கொண்டார். அதன் பிறகு நிருபர்களிடம்  பிரக்ஞானந்தா கூறுகையில், ”எனது தாயாரின் நீண்ட நாள் ஆசையாக இருந்த  காமாட்சி அம்மன் கோயில் தரிசனம் தற்போது மகிழ்ச்சியுடன் நிறைவு பெற்றது.

மாமல்லபுரம் போட்டிக்கான பயிற்சிகள் சிறப்பாக இருந்தது. இப்போட்டி தமிழகத்தில் நடைபெற இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக செஸ் வாரியத்திற்கும், தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சிறப்பாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். வெற்றி எனும் நோக்கில் செயல்படாமல் திறமையை வெளிப்படுத்துவதால் எனக்கு வெற்றி கிடைக்கிறது” என்றார். முன்னதாக, காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த செஸ் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளித்து பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories: