சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 27ம் தேதி தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் வருகிற 27ம் தேதி நடைபெற உள்ளது. கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.அமைச்சரவை கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, புதிய திட்டங்களுக்கான அனுமதி, தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது, சட்டமன்றத்தில் அறிவித்த திட்டங்களை செயல்படுத்துதல், புதிய கொள்கைகள் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. இதனால், வடகிழக்கு பருவ மழை தொடங்கும் முன்னரே எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், தற்போது நடந்து வரும் தூர்வாரும் பணிகள், கால்வாய் அகலப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்து விரைவுபடுத்தவும் அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்துவார் என தெரிகிறது.