திருவள்ளூர் மாவட்டத்தில் கன மழை சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்வு

சென்னை: சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்த்தேக்கங்களில், நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக நீர் இருப்பு அதிகரித்து இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு இதமான சூழல் ஏற்பட்டது. இரவில் கனமழை கொட்டித்தீர்த்து. இதனால் ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் நேற்றைய நிலவரப்படி 947 மில்லியன் கன அடி நீர் இருப்பும், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து 550 கன அடி நீரும், மழையின் காரணமாக 280 கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 621 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல், புழல் ஏரி நேற்றைய நிலவரப்படி மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது 3048 மில்லியன் கன அடி நீர் உள்ளது. நீர்வரத்து 270 கன அடி‌யாகவும், சென்னை மக்களுக்காக 703 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் 132 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 26 கன‌அடி வந்து கொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது 3475 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. இதில் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து வரும் நீர், மழைநீர் என 1,700 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 205 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கண்ணன்கோட்டை நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது 430 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் காரணமாக சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளின் நீர் இருப்பு அதிகரித்திருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: