தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொரோனா அறிகுறி உள்ள நபர்கள் குறித்த விவரம் தெரிவிக்க வேண்டும்: மாநகராட்சி ஆணையர் உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையர்  ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில்  கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.  குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் 94 என்ற நிலையில் இருந்த கொரோனா தொற்று தற்போது 250ஆக உயர்ந்துள்ளது. இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. தொற்று பாதித்தவர்கள் சிகிச்சை மற்றும் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனை,  சிகிச்சை  மையங்கள் மற்றும் பொது மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களிடம்  கொரோனா  தொற்று  அறிகுறியுள்ள நபர்கள் சிகிச்சை பெறுவதாகவும், அதுகுறித்த  தகவல்கள்  மாநகராட்சியின் கவனத்திற்கு வருவதில்லை எனவும் தெரிய வருகிறது.

தமிழக அரசின் சுகாதாரத்துறை நெறிமுறைகளின்படி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள், தங்களிடம் காய்ச்சல்,  சளி, மற்றும் இருமல் போன்ற கொரோனா தொற்று அறிகுறியுடன் வந்து சிகிச்சை பெறும் நபர்கள்  குறித்த  விவரங்களையும், வீடுகளில் தனிமைபடுத்திகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ள நபர்கள்   குறித்த விவரங்களையும் மாநகர நல அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். குறிப்பாக, அறிகுறி உள்ள நபர்கள் பற்றிய விவரங்களை  நாள்தோறும் gccpvthospitalreports@chennaicorporation.gov.in  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதேபோல், தனியார்  மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் செய்யும்  மருத்துவர்களும் தொற்று  அறிகுறியுள்ள நபர்களின் விவரங்களையும்,  தனிமைபடுத்திகொள்ள  அறிவுறுத்தப்பட்டுள்ள நபர்கள்  குறித்த விவரங்களையும் மாநகராட்சிக்கு  தெரிவிக்க வேண்டும். தவறினால் தமிழ்நாடு பொதுசுகாதார சட்டம் 1939 மற்றும் சென்னை நகர  முனிசிபல் கார்ப்பரேசன் சட்டம் 1919ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: