பேஸ்புக் மூலம் ஒரே பெண்ணுடன் 2 பேர் காதல் வாலிபரை கடத்தி கொன்ற போலீஸ் உட்பட 3 பேர் கைது: திடுக்கிடும் தகவல்கள்

ராஜபாளையம்: பேஸ்புக் மூலம் ஒரே பெண்ணை 2 பேர் காதலித்த விவகாரத்தில் வாலிபரை கடத்தி சென்று, கொலை செய்த போலீஸ்காரர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை, சிஎம்ஆர் சாலையைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி மகன் மாரிமுத்து(25). இவர், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த மே 28ம் தேதி வேலைக்குச் சென்றவர் திரும்பவில்லை. தந்தை அளித்த புகாரின்பேரில், கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிந்து மாரிமுத்துவை தேடி வந்தனர். கடைசியாக அவருடன் பேசிய நபரின் செல்போன் எண்ணை வைத்து மணிமுத்தாறு போலீஸ்காரர் வில்வதுரையை பிடித்து விசாரித்தனர். இதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: மாரிமுத்துவிற்கு சில ஆண்டுகளுக்கு முன் பேஸ்புக் மூலம் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இதற்கிடையே அந்த பெண்ணுடன் ராமநாதபுரத்தைச் சேர்ந்த வில்வதுரையும் பேஸ்புக் மூலம் பழகி காதலித்து வந்ததாக தெரிகிறது. நெல்லை மாவட்டம், மணிமுத்தாறு 12வது பட்டாலியனில் 2ம் நிலை காவலராக வில்வதுரை பணியாற்றி வருகிறார். ஒரே பெண்ணை இருவரும் காதலித்தது தெரிய வந்ததால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த மே 28ம் தேதி கும்மிடிப்பூண்டியில் வேலையை முடித்து விட்டு வந்த மாரிமுத்துவை, வில்வதுரை மற்றும் அவரது நண்பர்கள் இசக்கிராஜா, ரவிக்குமார் ஆகியோர் சந்தித்து காதலியுடன் பழக்கத்தை கைவிடுமாறு கூறினர். இதில் தகராறு ஏற்படவே, மாரிமுத்துவை காரில் கடத்தி வந்து தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் ஆளில்லாத நீரோடையில் வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை சாக்குமூட்டையில் கட்டி, காரில் ஏற்றி பல பகுதியில் சுற்றியுள்ளனர். கடைசியாக விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அடுத்த தளவாய்புரம் புனல்வேலி கண்மாயில் கல்லைக்கட்டி வீசி விட்டு சென்றுள்ளனர். இவ்வாறு கூறினர். இதையடுத்து போலீஸ்காரர் வில்வதுரை, இசக்கிராஜா, ரவிக்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். புனல்வேலி கண்மாயில் வீசப்பட்ட மாரிமுத்து உடலை. கும்மிடிப்பூண்டி சிப்காட், தளவாய்புரம் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

Related Stories: