சென்னை: தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசிக்கு பதிலாக ராகி விநியோகம் செய்ய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அரசாணை: சட்டப்பேரவையில் 8.4.2022 அன்று நடந்த உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானியக்கோரிக்கையின் போது, நீலகிரி மற்றும் தர்மபுரியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொதுவிநியோக திட்டத்தின் கீழ் ராகி விநியோகிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் அரிசிக்கு பதிலாக ஒரு குடும்பத்திற்கு 2 கிலோ ராகி என்ற விகிதத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் ராகி அதிகம் விளையும் முக்கிய மாவட்டங்கள் ஆகும்.