மரக்கிளை முறிந்து 4 பயணிகள் காயம்

சென்னை: சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் டிரைவர் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து ஆவடி, திருவொற்றியூர், திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு பஸ் ஏறுவதற்காக பயணிகள் காத்திருந்தனர். அப்போது அங்குள்ள மரத்தின் கிளை திடீரென முறிந்து விழுந்தது. இதில், பிராட்வே பேருந்து நிலையத்தையொட்டி குடிசை பகுதியில் வசித்து வரும் காயத்திரி, வசந்தா ஆகிய பெண்களுக்கு தலையிலும் கையிலும் காயம் ஏற்பட்டது. திருநின்றவூரில் இருந்து மாநகர பேருந்து (தடம் எண் 71இ) ஓட்டி வந்த டிரைவர் பாஸ்கரனுக்கும், கண்டக்டர் சுதாகரனுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.தகவலறிந்த எஸ்பிளனேடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து முறிந்துவிழுந்த மரக்கிளையை அப்புறப்படுத்தினர். மரக்கிளை முறிந்துவிழுந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: